Freitag, 30. November 2012

ஈழநாதம்


முள்ளிவாய்க்கால் மக்களை ஐ. நா. நலன் விசாரிப்பு 

 மூன்றரை வருடங்களின் பின்னர் ஐ.நா சபையின் அதிகாரிகள் முள்ளிவாய்க்கால் மக்களைச் சந்தித்து கலந்துரையாடியதுடன் அவர்களது குறைகளையும் கேட்டு அறிந்து கொண்டனர்.. கடந்த 27 ஆம் திகதி வடக்கிற்கான விஜயத்தினை மேற்கொண்ட ஐ.நா அதிகாரிகள் யாழ். குடாவிற்கு விஜயத்தினை மேற்கொண்டு யாழ் ஆயர் இல்லத்தில் ஆயரைச் சந்தித்து யுத்தத்திற்குப் பின்னரான நிலவரம் குறித்தும் கேட்டு அறிந்து கொண்டனர். . அதனையடுத்து இறுதிக்கட்ட யுத்தம் நடைபெற்ற பகுதியான முள்ளிவாய்க்கால் பகுதிக்குச் சென்ற ஐ.நா அதிகாரிகள் அண்மையில் மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மக்களுடனும் கலந்துரையாடினர். . அத்துடன் யுத்தத்திற்குப் பின்னர் உள்ள நிலமைகளை கேட்டறிந்தனர். அதன்போது தாங்கள் மீள்குடியேற்றப்படும் போது தங்களுக்கு போதியளவான வசதிகள் செய்து தரப்படவில்லை. தகரக் கொட்டகைகளே வழங்கப்பட்டுள்ளன. . அத்துடன் தென்னிலங்கையில் இருந்து வரும் இரும்பு வியாபாரிகளால் தாம் பல்வேறு சிரமங்களுக்கு உள்ளாவதாகவும் இதற்கு இராணுவத்தினர் உடந்தையாக இருப்பதனால் இராணுவத்தினருக்கும் எமக்கும் இடையில் முறுகல் நிலை காணப்படுகின்றது இது பல்வேறு பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும் எனவும் ஐ.நா அதிகாரிகளிடம் மக்கள் எடுத்துக் கூறினர். . இவற்றை கேட்ட அதிகாரிகள் நாம் உங்கள் உணர்வுகளை மதிக்கின்றோம். உங்கள் பிரச்சினைக்கு தீர்வு காண நாம் நடவடிக்கை எடுக்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளனர்.


இதன் போது வருகை தந்திருந்த ஐ.நா சபையின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்திய அரசியல் விவகாரச் செயலாளர் ஹிட்டோக்கி டென் மற்றும் யங்குவான்லீ ஆகியோர் முல்லைத்தீவு அரசாங்க அதிபர் வேதநாயகம் அவர்களுடனும் கலந்துரையாடியுள்ளனர்.

.

மாணவர் மீதான தாக்குதல் அமெரிக்கா கவலை 

 யாழ்ப்பாணத்தில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து வெளியாகியுள்ள தகவல்கள் தொடர்பாகவும் அமெரிக்கத்தூதரகம் பெரிதும் கரிசனை கொண்டுள்ளது. . இலங்கையில் ஊடகங்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ள அடக்குமுறைகள் குறித்தும் ஐக்கிய அமெரிக்கா கவலை வெளியட்டுள்ளது. . இது குறித்து இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள அறிக்கை வருமாறு: இலங்கையில் கருத்து வெளியிடும் சுதந்திரத்தின் மீது அண்மையில் விடுக்கப்பட்ட அச்சுறுத்தல்கள் தொடர்பில் அமெரிக்கத் தூதரகம் கரிசனை கொண்டுள்ளது. நவம்பர் 28ம் திகதியன்று யாழ்ப்பாணத்தில் செய்தியாளரொருவர் தாக்கப்பட்டமை, இலங்கை அரசாங்கத்தின் அதிகாரிகளால்; சுயாதீன ஊடக நிறுவனங்கள் மீது மேற்கொள்ளப்படும் தொல்லைகள், பிடிவிறாந்துகளின்றி ஊடகவியலாளர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் தேடுதல் நடவடிக்கைகள் என்பன ஊடக சுதந்திரத்தை முடக்குவதற்கு துணை நிற்பனவைகளாகும். பொறுமையைக் கடைப்பிடிக்குமாறும்; அமைதியான ஆர்ப்பாட்டங்களுக்கு மதிப்பளிக்குமாறும்; நாம் அதிகாரிகளைக் கேட்டுக்கொள்கின்றோம்.
USA


இலங்கைத்தீவில் தமிழர்களுக்கு நடந்தது ஓர் இனப்படுகொலையே : முன்னாள் ஐரோப்பிய பாரளுமன்ற உறுப்பினர் ரொபர்ட் எவன்ஸ்

இலங்கைத்தீவில் உள்ள தமிழ்மக்கள் மீது சிறிலங்கா அரசு மேற்கொள்வது ஒர் இனப்படுகொலையே என பிரித்தானியாவினைச் சேர்ந்த முன்னாள் ஐரோப்பிய பாரளுமன்ற உறுப்பினர் ரொபர்ட் எவன்ஸ் அவர்கள் தெரிவித்துள்ளார். . பிரித்தானியாவில் இன்று வியாழக்கிழமை தொடங்கவுள்ள நாடுகடந்த அரசாங்கத்தின் நான்காவது பாராளுமன்ற அமர்வின் முன்நிகழ்வாக, நேற்று புதன்கிழமை பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்றிருந்த மாநாட்டில கலந்து கொண்டு உரையாற்றும் பொழுதே இக்கூற்றினை அவர் தெரிவித்துள்ளார். சிறிலங்கா சனநாயக சோசலிச குடியரசு என அதன் பெயரில் உள்ளதுபோல் சனநாயகத்தையோ அல்லது சோசலிசத்தையோ பின்பற்றவில்லை எனக்குறிப்பிட்ட ரொபர்ட் எவன்ஸ் அவர்கள் அங்கு நடைபெற்றது இனப்படுகொலை என்பதனை உறுதிபடத் விளக்கினார். விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த வன்னியில் மக்கள் சுதந்திரமாக வாழ்ந்ததை தான் நேரில் கண்டாதகவும் அது நாட்டுக்குள் ஒரு நாடாக இருந்தது எனவும் தெரிவித்துள்ளார். இந்த மாநாட்டில் பிரித்தானிய தொழில்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் வீரேந்திரசர்மா, தமிழர்களுக்கான பிரித்தானிய அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவர் லீ ஸகொட், நோர்வே நாடடைச்சேர்ந்த விவரணப்பட இயக்குனர் பியர்ட் அன்சார்ட் , சர்வதேச மனித உரிமைவாதியும் சட்டவாளருமான கரன் பார்க்கர், பேராசிரியர் பீற்றர் சால்க், வட அயர்லாந்து பாராளுமன்ற உறுப்பினர் மார்க் டாற்றன் ஆகியோருடன் உலகின்பலபாகங்களிலும் இருந்து வருகை தந்திருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதிகளும் பங்கெடுத்திருந்தனர். மாநாட்டு விபரம் : நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதிநிதி மாணிக்கவாசகர் தலைமையில் இடம்பெற்றிருந்த இந்த மாநாட்டினை துணை சபாநாயகர் சுகன்யா புத்திசிகாமணி அவர்கள் அகவணக்கத்துடன் தொடக்கி வைத்திருந்தார். மாணிக்கவாசகர் தனது அறிமுகவுரையில், நாடு கடந்த அரசாங்கத்தின் உருவாக்கம் தொடர்பான அரசியல் பின்னணி பற்றி விபரித்ததுடன் அதன் சர்வதேச பரிமாணங்கள் பற்றியும் விளக்கினார். தாயகத்தில் அமைதியானதும், நியாயமானதுமான தீர்வு ஏற்படும்வரை புலம்பெயர் தமிழர்கள் தொடர்ந்து போராடுவார்கள் எனவும் குறிப்பிட்டார். இலங்கைத்தீவில் இடம்பெற்ற மானிடத்திற்கு எதிரான குற்றச்செயல்கள், போர்க்குற்றங்கள், இனப்படுகொலை ஆகியவற்றினை விசாரிப்பதற்கான சர்வதேச சுயாதீன விசாரணைக்குழு ஒன்று அமைக்கப்படவேண்டும் என்பதனை வலியுறுத்தியதுடன், தமிழ்மக்களின் அரசியல் அபிலாசைகளை கண்டறிய சர்வதேச நாடுகளின் மேற்பார்வையில் பொதுவாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும் எனவும் குறிப்பிட்டார். லண்டன் ஈலிங் தொகுதியின் பிரித்தானிய தொழில்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் வீரேந்திரசர்மா தனதுரையில் நடந்து முடிந்தவைகளைப்பற்றி பேசுவதுபோல், இனி என்ன செய்யப்படவேண்டும் என்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும், ஒரு நியாயமான தீர்வினை கொண்டுவரவேண்டும் எனத் தெரிவித்தார். இவ்விடயங்களை தான் இந்திய அரசாங்க மட்டத்தின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதாகவும் குறிப்பிட்டார். தமிழர்களுக்கான பிரித்தானிய அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் தலைவர் லீ ஸகொட் அவர்கள தனதுரையில் தமிழ் மக்களின் பிரச்சனையை தொடர்ந்தும் ஐநா சபையின் கவனத்திற்கு கொண்டு செல்லவிருப்பதாகக் குறிப்பிட்டார். நோர்வே நாடடைச்சேர்ந்த விவரணப்பட இயக்குனர் திருமதி. பியர்ட் அன்சார்ட் இலங்கைத்தீவில் ஊடகவியலாளர்களும் இழைக்கப்படும் கொடுமைகள், கருத்துச் சுதந்திரத்திற்கான கட்டுப்பாடுகள், வெளிநாடுகளில் தஞ்சமடைந்திருக்கும் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் பற்றி விபரித்தார். சர்வதேச மனித உரிமைவாதியும் சட்டவாளருமான கரன் பார்க்கர் அம்மையார் தனதுரையில் இலங்கைத் தீவு விடயத்தில் ஐநா சபையின் வேறு வேறு பிரிவுகள் முறையாகச் செயற்படவில்லை எனக் குற்றம்சாட்டினார். ஐநா சபையின் சிறுவர் விவகாரங்களுக்கான சிறப்பு ஆணையாளர் ராதிகா குமாரசாமி சிறுவர் விவகாரத்தில் ஐந்து பிரிவுகளின் வெறுமனே சிறுவர்களை போரில் ஈடுபடுத்துதல் என்ற ஒரு விடயத்தில மாத்திரம் கவனம் செலுத்தியதாகவும், சிறுவர் நலன் சார்நத மற்றய விடயங்களில் கவனம் செலுத்தவில்லை எனவும்குறிப்பிட்டார். பேராசிரியர் பீற்றர் சால்க், வட அயர்லாந்து பாராளுமன்ற உறுப்பினர் மார்க் டாற்றன் ஆகியோரும் உரை நிகழ்தினார்கள். மாநாட்டின் நிறைவுரையினை வழங்கிய நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசியல்விவகார அமைச்சர் தயாபரன்தணிகாசலம் அவர்கள், தென்னாபிரிக்காவில் நிறவெறிக்கு எதிரான போராட்டத்தில், ஆபிரிக்க தேசியக் கொங்கிரஸ் கொண்டு வந்தது போல் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் 'தமிழீழ விடுதலை சாசனம்' கொண்டுவர வேண்டும் என்ற பிரேரணையை வரும் அமர்வுகளின் சமர்ப்பிக்கவுள்ளதாக குறிப்பிட்டார்.

resettle2

Keine Kommentare:

Kommentar veröffentlichen

Hinweis: Nur ein Mitglied dieses Blogs kann Kommentare posten.